Saturday, January 30, 2010

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம் 
பூ--மாலை உடல் மறைக்கும்!
இதழ் மேலே--இதழ் மோதும்-- அந்த 
இன்பம் தேடுது எனக்கும்!

காலதேவனின் கலக்கம்!
இதை--காதல் என்பது பழக்கம்!
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்--பெறப்
போகும் துன்பத்தின் துவக்கம்!

பனியும், நிலவும், பொழியும் நேரம் 
மடியில் சாய்ந்தாலென்ன?
பசும் பாலைப்போலும், மேனியெங்கும்
பழகிப்பார்த்தாலென்ன?

உடலும் உடலும் சேரும் வாழ்க்கை 
உலகம் மறந்தாலென்ன?---தினம் 
ஓடி ஆடி ஓயும்முன்பே...
உண்மை அறிந்தாலென்ன?

உறவுக்கு மேலே சுகம் கிடையாது...
அணைக்கவே தயக்கமென்ன?

இது ஓட்டை வீடு, ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசை என்ன?

முனிவன் மனமும் மயங்கும் பூமி 
மோகவாசல் தானே! மனம் 
மூடி மூடிப் பார்க்கும் போதும் 
தேடும் பாதை தானே!

பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் 
காதல் கானல் நீரே! இது 
மேடு பள்ளம் தேடும் உள்ளம் 
போகும் ஞானத்தேரே...!

இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்
இதயமே மாறிவிடு!

நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை 
உன்னை நீ மாற்றிவிடு!     

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்


பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு
படைத்தவனிருப்பான் பார்த்துக்கொள்வான் பயணத்தை தொடர்ந்து விடு--
நீ பயணத்தை தொடர்ந்துவிடு 

ஐந்து விரல்களும் ஒன்றாயிருக்கும் மனிதன் உலகில் கிடைப்பானா?
அத்தனை பேர்க்கும் நல்லவனாக ஆண்டவன் கூட இருப்பனா?
உலையின் வாயை மூடும் கைகள் ஊரின் வாயை மூடிடுமா?
அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக்கூடிய காரியமா?

நரம்பிலாத நாவால் எதையும் வரம்பில்லாமல் கூறிடுவார் 
இருந்தால் வருவார் இழந்தால் பிரிவார்--நாளுக்கு நாள்தான் மாறிடுவார்
காய்ந்த மரம்தான் கல்லடிபடுமென கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு 
புத்தன் இயேசு காந்தியைக்கூட குற்றம் சொல்லி கேட்டதுண்டு... 
 

யாரடா மனிதன் இங்கே

யாரடா  மனிதன் இங்கே 
கூட்டிவா அவனை அங்கே 
இறைவன் படைப்பில் 
குரங்குதான் மீதி இங்கே 

மனிதரில் நாய்கள் உண்டு 
மனதினில் நரிகள் உண்டு 
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பு உண்டு 

நாயும் நரியும் புலியும் பாம்பும் 
வாழும் பூமியிலே 
மானம் பண்பு ஞானம் கொண்ட
மனிதனைக் காணவில்லை 

சிரிப்பினில் மனிதனில்லை 
அழுகையில் மனிதனில்லை 
உள்ளத்தில் மனிதனில்லை 
உறக்கத்தில் மனிதனுண்டு 

வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் 
நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால்---அவனை 
உலகம் வணங்குமடா 

விவசாயி....!


விவசாயி.....! விவசாயி....
கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி....விவசாயி
முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி...!

என்ன வளம் இல்லையிந்தத் திருநாட்டில் ?
ஏன் கையை எந்தவேணும் வெளிநாட்டில் ?
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...!

கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி?

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி...!
பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி--அது
பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி...!

தாயில்லாமல் நானில்லை

தாயில்லாமல் நானில்லை
தானே எவனும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

ஜீவநதியாய் வருவாள் --என்
தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப்பொறுப்பாள்--தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்

தூய நிலமாய் கிடப்பாள்--தன்
தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம்கனிந்திடுவாள்

மேகவீதியில் நடப்பாள் --உயிர்
மூச்சினிலே கலந்திருப்பாள்
மலர்முடி தொடுவாள் --மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்குத் துணையிருப்பாள்

ஆதி அந்தமும் அவள்தான்--நம்மை
ஆளும் நீதியும் அவள்தான்
அகந்தையை அழிப்பாள்--ஆற்றலை கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி-(அந்த தாயில்லாமல் )